Tuesday, 21 August 2018

கொழும்பை வந்தடைந்த யப்பான் தூதுவர்!


ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் துணோரி ஒனோஜெரா (Itsunori Onodera) நேற்று இரவு கொழும்பை வந்தடைந்தார்.

இவரை பாதுகாப்பு பிரிவின் பிரதம அதிகாரி அட்மிரல் ரவி விஜேகுணரட்ன, இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் கெனிச்சி சுகனுமா (Kenichi Suganuma) ஆகியோர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வரவேற்றனர்.

ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் இலங்கை மற்றும் இந்தியாவிற்கான 5 நாள் உத்தியோக பூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

இந்தியாவில் 2 நாள் விஜயத்தை பூர்த்தி செய்துகொண்டு ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் இலங்கை வந்துள்ளார்.

கொபி அனானின் சேவை மகத்தானது; பிரதமர் ரணில்!


ஐக்கிய நாடுகள் சபைக்கு கொபி அனான் ஆற்றிய சேவைகள் மகத்தானவை என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இனங்களுக்கும் தனிநபர்களுக்கும் சமூகத்திற்கும் இடையில் சமாதானத்தை கட்டியெழுப்புவதற்காக அவர் தமது வாழ்வை அர்ப்பணித்து நியாயமான நீதியை மதிக்கும் சமூகத்தை கட்டியெழுப்ப பாரிய சேவையை ஆற்றியவராக கொபி அனானை குறிப்பிட முடியும் என்று பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொபி அனானின் மறைவு குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள அனுதாப செய்தியில் இந்த விடயம் இடம்பெற்றுள்ளது.

பிரதமரின் அனுதாப செய்தி ஐக்கிய நாடுகள் செயலாளர நாயகம் அன்டோனியோ குத்ரேஸ்சிற்கு அனுப்பப்பட்டுள்ளது.

இதேவேளை, பாகிஸ்தான் பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ள இம்ரான் கானுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தொலைபேசி மூலம் அவரை தொடர்பு கொண்டு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார். இலங்கை மக்களும் அரசாங்கமும் அவருக்கு வாழ்த்து தெரிவிப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறினார்.

இருநாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்காக பிராந்திய, சமூக பொருளாதார, அரசியல் முன்னேற்றத்திற்காக செயற்படுவது தமது நோக்கமாகும் என்றும் தமக்கு வாழ்த்து தெரிவித்தமைக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு நன்றி தெரிவித்தார்.

இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு பிரதமர் இம்ரான் கானுக்கு பிரதமர் அழைப்பு விடுத்தார்.

சிறிய குளங்கள் புனரமைக்கப்படவுள்ளன!


நாடாளவிய ரீதியில் கைவிடப்பட்டுள்ள சிறிய குளங்கள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.

இதற்காக ஆயிரத்து 500 சிறிய குளங்கள் இனங்காணப்பட்டுள்ளன.

விவசாயதுறை அமைச்சர் மஹிந்த அமரவீரவின் பணிப்புரைக்கு அமைய கமநல சேவைகள் திணைக்களம் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துகிறது.

இதற்கென இந்தாண்டு 100 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

Monday, 20 August 2018

எஜமானை கொடிய பாம்பிடமிருந்து காப்பாற்றிய நாய்!



வயலில் வேலை செய்த விவசாயி ஒருவரை அவரது வளர்ப்பு நாய், புடையன் பாம்பிடமிருந்து காப்பாற்றிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்தச் சம்பவம் சங்குவேலிப் பகுதியில் நேற்று முந்தினம் ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்றுள்ளது.

இது குறித்து தெரியவருவதாவது,

குறித்த விவசாயி தனது வயற் காணியில் காலை வேளை நிலத்தைப் பண்படுத்திக்கொண்டு இருந்துள்ளார். அதன்போது அவரது கடைசி மகன் காலை உணவை எடுத்து வந்துள்ளார்.

மகனுடன் கூடவே அவர்கள் வீட்டில் வளர்க்கப்படும் நாய் ஒன்றும் வந்துள்ளது.

இந்த நிலையில் குறித்த விவசாயி வேலைக் களைப்பில் வயல் வரம்பு ஓரமாக வந்து நின்றுள்ளார். இதன்போது அவர்களது நாய் குறித்த விவசாயியின் காலை நோக்கிக் குரைத்ததுடன் முன்னும் பின்னும் வெருட்சியுடன் ஓடுவதாக சைகை செய்தது.

இதனையடுத்து கீழே தனது காற் பக்கத்தைக் குனிந்து பார்த்த விவசாயிக்கு பெருத்த அதிர்ச்சி காத்திருந்தது.

அவரது காலுக்கு கீழே நன்கு கொளுத்த கண்ணாடி விரியன் பாம்பு சுருண்ட நிலையில் இருந்துள்ளது. உடனடியாக அவ்விடத்தை விட்டு பதறியடித்து ஓடிய குறித்த விவசாயி தனது நாயை நன்றியுடன் பார்த்து தடவியுள்ளார்.

இதுகுறித்து தெரிவித்த அவர், ”பொதுவாக வயல் பகுதிகளில் காணப்படும் இந்த பாம்பு மிகவும் விசம் நிறைந்தது என்பார்கள். நான் வரம்பு ஓரமாக வேலைக் களைப்பில் நடந்து வந்தபோது அந்தப் பாம்பைக் கண்டேன். ஆனால் அது சுருண்ட நிலையில் இருந்ததால் காய்ந்த மாட்டு எரு என்று நினைத்துவிட்டேன். நல்லவேளை அந்தப் பாம்பிடமிருந்து எங்கள் நாய் என்னைக் காப்பாற்றிவிட்டது.” என்றார்.

குறித்த விவசாயியின் மகன் குறிப்பிடுகையில்,

”அப்பாக்கு சாப்பாடு கொடுப்பதற்காக நான் வந்தபோது என்கூட நாயும் வந்தது. நான் வீட்டிற்கு செல்லுமாறு விரட்டினேன். இருந்தாலும் அது என்னுடன் விடாப்பிடியாக பிந்தொடர்ந்து வந்துள்ளது.” என்றார்.

விரியன் பாம்புகள் இலங்கையில் சாதாரணமாகவே சுற்றித்திரியும் ஊர்வனவாகும். வயல்களில் காணப்படும் இந்த பாம்பு இனம் இரவில் வேட்டைக்கு கிளம்புவதுடன் பகலில் தனது உடலைச் சுருட்டிக்கொண்டு ஓய்வெடுக்கும்.

இது ஒருமுறை கடித்தால் சில நிமிடங்களிலேயே மனிதரின் நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு இறப்பு ஏற்பட்டுவிடும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

சினிமாப் பாணியில் பறந்த வாகனம்!


வவுனியா நெடுங்கேணியில் இன்று காலை 9மணியளவில் இடம்பெற்ற விபத்தில் பிறாடோ வாகனத்தின் சாரதி எவ்வித காயங்களின்றி உயிர்தப்பியுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
நேற்று இரவு கொழும்பிலிருந்து வைத்தியர் ஒருவரை முல்லைத்தீவில் இறக்கிவிட்டு இன்று அதிகாலை கொழும்பு திரும்பும்போது நெடுங்கேணி சன்னாசிப்பரந்தன் பாலத்தில் பிறாடோ வாகனம் வீதியைவிட்டு விலகி பள்ளத்திற்குள் பாய்ந்து விபத்துள்குள்ளாகியுள்ளது. இதன்போது எவ்வித காயங்களும் இன்றி சாரதி அதிஷ்டவசமாக தப்பியுள்ளார்.

நித்திரைத்தூக்கமே இவ்விபத்திற்குக்காரணமாக இருக்கலாம் என்று பொலிசாரின் ஆரம்ப விசாரணைகளின் போது தெரிவித்துள்ளனர். இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நெடுங்கேணிப் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

கேரள வெள்ளத்தால் இளைஞர் எடுத்த அதிர்ச்சி முடிவு!


கேரள மாநிலத்தின் பல மாவட்டங்கள் வெள்ளக்காடாக மாறியதால் லட்சக்கணக்கான மக்கள் தங்களின் வசிப்பிடங்களை விட்டு வெளியேறி நிவாரண முகாம்களில் தங்கி வருகின்றனர்.

தற்பொழுது ஓரளவுக்கு வெள்ளம் வடிந்துள்ளது அதனால் முன்னர் நீரில் மூழ்கியிருந்த தனது வீடு எப்படி இருக்கிறது? என்பதை பார்ப்பதற்காக வந்த கைலாஷ் எனும் இளைஞர், தனது பள்ளி இறுதிச் சான்றிதழ் தண்ணீரில் நனைந்து நாசமானதை கண்டு மிகுந்த வேதனை அடைந்தார்.

இதனால் துக்கம் தாங்காமல் வீட்டுக்குள் தூக்கிட்டு பிணமாகினார். கைலாஷை காணவில்லை என அவரது பெற்றோரும் உறவினர்களும் மிகுந்த கவலை அடைந்தனர். இந்நிலையில், நேற்று வீட்டுக்கு வந்த அவர்கள் வீட்டுக்குள் கைலாஷ் பிணமாக தொங்கிய காட்சியை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இந்தச் சம்பவம் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பையும் கடந்து அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இத்தாலியில் பயங்கரமாக கொல்லப்பட்ட இலங்கையர்?


நீண்ட காலமாக இத்தாலியில் வசித்துவந்த இலங்கையைச் சேர்ந்த நபர் ஒருவர் நடு வீதியில் மோசமான காயங்களுடன் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் வென்னப்புவ என்ற பகுதியைச் சேர்ந்த மெரில் சாந்தி என்ற 52 வயதான குடும்பஸ்தரே இந்த பயங்கரத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் மூன்று பிள்ளைகளின் தந்தை எனக் கூறப்பட்டுள்ளதுடன் இத்தாலியின் நபொலி விதியில் படு காயங்களுடன் விழுந்து கிடந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

ஆனாலும் மருத்துவமனையில் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட சிகிச்சைகள் பலனளிக்காத நிலையில் சாவடைந்தார்.

கடந்த 25 வருடங்களாக இத்தாலியில் மனைவி பிள்ளைகளுடன் அவர் வசித்து வந்த நிலையில் இவ்வாறு சாவடைந்துள்ளார்.

எவ்வாறாயினும் அவர் விபத்துக் காரணமாக சாவடைந்தாரா அல்லது யாரேனும் அடித்துக் கொன்றார்களா என பொலிஸார் விசாரணைகளை முடுக்கியுள்ளனர்.

இதேவேளை அந்தப் பிரதேசத்தில் நாசகாரக் கும்பல்கள் அதிகம் உலாவுவதாகவும் அவர்களால்தான் இவர் அடித்துப் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

நீராடச் சென்ற சிறுவனுக்கு நேர்ந்த பரிதாபம்!


கலென்பிதுனுவெவ, திவுல்வெவ பகுதியில் நீராட சென்ற 17 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளமை அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரதேசவாசிகள் ஒன்றிணைந்து குறித்த சிறுவனை மீட்டு கலென்பிதுனுவெவ வைத்தியசாலையில் அனுமதித்த போதும், குறித்த சிறுவன் அந்த சந்தர்ப்பத்தில் உயிரிழந்திருந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கலென்பிதுனுவெவ, கெடலாவ பகுதியில் உறவினர் ஒருவர் வீட்டில் தங்கியிருந்த கண்டி பொக்கவலப் பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்தவரின் சடலத்தில் பல காயங்கள் காணப்பட்டதால் இறப்புத் தொடர்பில் சந்தேகம் இருப்பதாக பொலிஸார் தெரிவித்ததுடன் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இலங்கை நோயாளிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி!


25 மருந்துப் பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களின் விலைகள் எதிர்வரும் இரண்டு வார காலத்திற்குள் குறைக்கப்படும் என்று சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

இதற்கான வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்படும் என்றும் அமைச்சர் கூறினார் மருந்துப் பொருட்களின் விலை குறைப்பு சுமார் இரண்டு பில்லியன் ரூபா அரச செலவினங்களை மீதப்படுத்தும் என்று அவர் குறிப்பிட்டார்.

தொற்றா நோய் தொடர்பாக ஆராயும் பேரவை கூட்டத்தில் அமைச்சர் உரையாற்றினார்.

இந்த மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு வருடாந்தம் ஏழு பில்லியன் ரூபாவுக்கு அதிகமான தொகையை அரசாங்கம் செலவிட்டு வந்தது.

புற்றுநோய்க்கான 95 வீதமான மருந்து வகைகளின் விலைகளை அரசாங்கம் இதுவரை குறைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பில் உயிர் வாயு உற்பத்தி!


மட்டக்களப்பு பொதுச் சந்தையில் வீசப்படும் கழிவுகளிலிருந்து உயிர்வாயு தயாரிப்பதற்கான நிலையம் ஒன்று அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையத்திற்கு அடிக்கல் நாட்டும் வைபவம் அண்மையில் இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பு மாநகர சபையும், ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிறுவனமும் இணைந்து இந்த உயிர்வாயு அமைக்கும் நிலையத்தினை அமைக்கவுள்ளன.
பொதுவாக மட்டக்களப்பு பொதுச் சந்தையில் அன்றாடம் ஏராளமான கழிவுப் பொருட்கள் தேங்குவதாகவும் இவை முறையான பராமரிப்பின்மையால் பெரும் சுகாதார்ச் சீர்கேடுகளை ஏற்படுத்துவதாகவும் பொதுமக்களால் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இவ்வாறான உயிர்வாயு தயாரிப்பதற்கான நிறுவனம் அமைத்தல் பிரதேச அபிவிருத்திக்கு உந்துசக்தியாக அமையும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.