வயலில் வேலை செய்த விவசாயி ஒருவரை அவரது வளர்ப்பு நாய், புடையன் பாம்பிடமிருந்து காப்பாற்றிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்தச் சம்பவம் சங்குவேலிப் பகுதியில் நேற்று முந்தினம் ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்றுள்ளது.
இது குறித்து தெரியவருவதாவது,
குறித்த விவசாயி தனது வயற் காணியில் காலை வேளை நிலத்தைப் பண்படுத்திக்கொண்டு இருந்துள்ளார். அதன்போது அவரது கடைசி மகன் காலை உணவை எடுத்து வந்துள்ளார்.
மகனுடன் கூடவே அவர்கள் வீட்டில் வளர்க்கப்படும் நாய் ஒன்றும் வந்துள்ளது.
இந்த நிலையில் குறித்த விவசாயி வேலைக் களைப்பில் வயல் வரம்பு ஓரமாக வந்து நின்றுள்ளார். இதன்போது அவர்களது நாய் குறித்த விவசாயியின் காலை நோக்கிக் குரைத்ததுடன் முன்னும் பின்னும் வெருட்சியுடன் ஓடுவதாக சைகை செய்தது.
இதனையடுத்து கீழே தனது காற் பக்கத்தைக் குனிந்து பார்த்த விவசாயிக்கு பெருத்த அதிர்ச்சி காத்திருந்தது.
அவரது காலுக்கு கீழே நன்கு கொளுத்த கண்ணாடி விரியன் பாம்பு சுருண்ட நிலையில் இருந்துள்ளது. உடனடியாக அவ்விடத்தை விட்டு பதறியடித்து ஓடிய குறித்த விவசாயி தனது நாயை நன்றியுடன் பார்த்து தடவியுள்ளார்.
இதுகுறித்து தெரிவித்த அவர், ”பொதுவாக வயல் பகுதிகளில் காணப்படும் இந்த பாம்பு மிகவும் விசம் நிறைந்தது என்பார்கள். நான் வரம்பு ஓரமாக வேலைக் களைப்பில் நடந்து வந்தபோது அந்தப் பாம்பைக் கண்டேன். ஆனால் அது சுருண்ட நிலையில் இருந்ததால் காய்ந்த மாட்டு எரு என்று நினைத்துவிட்டேன். நல்லவேளை அந்தப் பாம்பிடமிருந்து எங்கள் நாய் என்னைக் காப்பாற்றிவிட்டது.” என்றார்.
குறித்த விவசாயியின் மகன் குறிப்பிடுகையில்,
”அப்பாக்கு சாப்பாடு கொடுப்பதற்காக நான் வந்தபோது என்கூட நாயும் வந்தது. நான் வீட்டிற்கு செல்லுமாறு விரட்டினேன். இருந்தாலும் அது என்னுடன் விடாப்பிடியாக பிந்தொடர்ந்து வந்துள்ளது.” என்றார்.
விரியன் பாம்புகள் இலங்கையில் சாதாரணமாகவே சுற்றித்திரியும் ஊர்வனவாகும். வயல்களில் காணப்படும் இந்த பாம்பு இனம் இரவில் வேட்டைக்கு கிளம்புவதுடன் பகலில் தனது உடலைச் சுருட்டிக்கொண்டு ஓய்வெடுக்கும்.
இது ஒருமுறை கடித்தால் சில நிமிடங்களிலேயே மனிதரின் நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு இறப்பு ஏற்பட்டுவிடும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.